நடிகர் ஸ்ரீகாந்த் கோகைன் என்ற போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணாவும் போதை பொருள் பயன்படுத்தியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்தனர்.
அதன்படி நேற்று மாலை நடிகர் கிருஷ்ணா நுங்கம்பாக்கம் போலீசில் ஆஜரானார். அவரிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. அவரது செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. வீட்டிலும் சோதனை போட்டனர். அவர் சாப்பிட்டு வந்த மருந்து, மாத்திரைகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணாவுக்கு ரத்த பரிசோதனையும் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார். கிருஷ்ணாவுக்கு போதை பொருள் சப்ளை செய்த கெவின் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்காள்ளப்பட்டு வருகிறது.
கிருஷ்ணாவும், கெவினும் வாட்ஸ் அப் மூலம் உரையாடி உள்ளனர். அதில் கோகைன் போதை பொருள் குறித்து கோட் வேர்டு மூலம் இவர்கள் உரையாடி உள்ளனர். கோகைன் என்பதற்கு பதில் pils என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர்.
போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கிருஷ்ணா கெவினுடன் உரையாடியதை அழித்து விட்டார். ஆனால் போலீசார் அதனை மீண்டும் கண்டுபிடித்து அதன் மூலம் விசாரணை நடத்தி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று பரபரப்புடன் பேசப்படுகிறது.
