Skip to content

பணம் திருடிய வழக்கு… கணவனின் ஜாமீனுக்காக ஆஜராக வந்த மனைவி கைது

கிருஷ்ணராயபுரம் அருகே வங்கியில் பணம் எடுத்து வந்த விவசாயி இருசக்கர வாகனத்தில் வைத்து நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்ற போது மர்ம நபர்கள் திருடிச் சென்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். சிறையில் உள்ள கணவருக்கு ஜாமீன் வழக்கில் நேரில் ஆஜராக வந்த மனைவியை காவல்துறையினர் நீதிமன்றத்தில் வைத்து கைது செய்த சம்பவத்தால் பரபரப்பு.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகேசன் (வயது 50). இவர் கடந்த மாதம் 17ஆம் தேதி சேங்கலில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் நகையை அடகு வைத்து 2 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை எடுத்து தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துள்ளார்.

மீண்டும் பழைய ஜெயங்கொண்டம் வீட்டிற்கு சின்னசேங்கல் வழியாக வந்த போது தனியார் பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு விட்டு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்தி 80ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து மாயனூர் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை வைத்து திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (வயது 60). பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் (வயது 40 ) என இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட செந்தில் மனைவி கவிமஞ்சு, கணவருக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜாமீன் மனுவின் விசாரணை இன்று கிருஷ்ணராயபுரம் நீதிமன்றத்தில் வந்த நிலையில், இருவர் ஜாமீன் கொடுக்க கையெழுத்திட வேண்டும். இந்நிலையில் மனைவி கவிமஞ்சு மற்றும் உறவினர் ஒருவர் என இருவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட செந்தில் கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தை தனது மனைவியிடம் தான் கொடுத்துள்ளேன் என கூறியதால் நீதிமன்றத்தில் காத்திருந்த காவல்துறையினர் செந்திலின் மனைவி கவி மஞ்சுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்றத்தில் கணவருக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்து மனைவி நேரில் ஆஜராகிய நிலையில் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!