ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. கூமாபட்டி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு இடமாகும், இது சமீபத்தில் சமூக வலைதளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஒரு இளைஞரின் ரீல்ஸ் வீடியோ மூலம் பிரபலமடைந்தது.
இதனால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தைப் பார்வையிட ஆர்வத்துடன் சென்றனர். ஆனால், கூமாபட்டி எதிர்பார்த்த அளவுக்கு சுற்றுலாத் தலமாக வசதிகள் இல்லாத இடமாக இருந்ததால், பலர் ஏமாற்றமடைந்தனர். இயற்கையான அழகு இருந்தாலும், அங்கு செல்வதற்கு உரிய போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமான அளவில் இல்லை.
இதனால், ரீல்ஸை நம்பி சென்ற சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்து, ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனிடையே, பொதுப்பணித்துறையினர், இந்த இடத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஏனெனில் இது இன்னும் முறையாக சுற்றுலாத் தலமாக உருவாக்கப்படவில்லை.
இதனையடுத்து, கூமாப்பட்டியை ட்ரெண்டிங் ஆக்கிய இளைஞர் தங்கப்பாண்டி, “முதலமைச்சர் ரூ.10 கோடி ஒதுக்கியபோதும், பிளவக்கல் அணை முடங்கியிருக்கு. இது எங்க கூமாப்பட்டிக்கான அவச்செயல் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்து பிளவக்கல் அணையில் உள்ள பூங்காவை புனரமைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் விருதுநகர் ஆட்சியர் சுக புத்ரா, ”தமிழ்நாடு முதலமைச்சர், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவுக்கல் பெரியாறு அணையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.