திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார் , தோஹா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெளிநாட்டு பணம், அரிய வகை விலங்குகள், பறவைகள், போதைப் பொருட்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
இந்த கடத்தலை தடுக்க சுங்கத்துறை, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமையில் உயிருடன் உள்ள ஒரு அணில் குரங்கு (squirrel Monkey) கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த குரங்கை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் தினந்தோறும் கடத்தல் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை முற்றிலும் தடுப்பதற்கு சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி பன்னாட்டு விமான நிலையம் கடத்தல் கூடாரமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டி வருகிறார்கள். விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து கடத்தல் சம்பவங்களை முற்றிலும் தடுப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.