Skip to content

அரியலூரில்… மாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில், உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு தன்னார்வ இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (30.06.2025) கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக, தன்னார்வ இரத்ததான கொடையாளர்களை ஊக்குவிக்கவும், இரத்த தட்டுப்பாட்டை குறைக்கவும் இரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்த உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இப்பேரணியானது அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி நுழைவு வாயில் அருகில் நிறைவடைந்தது. மேலும், இப்பேரணியில் அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் இரத்த மையம் மற்றும் இரத்ததான முகாமில் உயிர்காக்கும் பொருட்டு தன்னார்வமாக இரத்த தானம் செய்த நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு கேடயத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி வழங்கினார்.

உயிர் காக்கும் குருதியை இலவசமாக வழங்கும் தன்னார்வ குருதிக் கொடையாளர்களுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், தேவையில் இருக்கும் நோயாளிகளுக்கு தரமான பாதுகாப்பான இரத்தம் மற்றும் இரத்தம் சார் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய தொடர்ந்து இரத்ததானம் அளிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 14ம் நாள் உலக குருதி கொடையாளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 2024

– மார்ச் 2025 -ல் இரத்த மையம் மற்றும் இரத்த தான முகாமில் உயிர்காக்கும் பொருட்டு தன்னார்வமாக இரத்த தானம் செய்த 26 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு கேடயங்களை வழங்கினார். மேலும், உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றிப்பெற்ற அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த 06 மாணாக்கர்களுக்கு கேடயத்தினையும் வழங்கினார்.

இந்த ஆண்டின் உலக குருதி கொடையாளர் தினத்தின் கருப்பொருளாக “இரத்தம் கொடுங்கள், நம்பிக்கை கொடுங்கள்: ஒன்றாக நாம் உயிர்களை காப்பாற்றுவோம்! என்ற பொருளை மையமாக கொண்டு நடைபெற்று வருகிறது.

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இரத்த மையத்தில் கடந்த ஆண்டு 4,645 யூனிட்ஸ் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதனைக்கொண்டு 8,500 மேற்பட்ட இரத்தம் மற்றும் இரத்த கூறுகள் மருத்துவமனை உள்நோயாளிகளாக சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள், எலும்பு அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், அவசர மற்றும் விபத்து பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, அவசர அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அ.முத்துக்கிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ரமேஷ், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், நிலைய மருத்துவ அலுவலர் மரு.கொளஞ்சிநாதன், துணை நிலைய மருத்துவ அலுவலர் மரு.ஜெயசுதா, அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, இணைப்பேராசிரியர் குருதியேற்றுத்துறை மரு.பிரியா, குருதி வங்கி மருத்துவ அலுவலர் மரு.சந்திரசேகரன், மற்றும் குருதி வங்கி செவிலியர் மற்றும் ஆய்வக நுட்புநர்கள், தன்னார்வ குருதி கொடையாளர்கள், மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

error: Content is protected !!