சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 1-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
இந்தப் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெற்றிருந்தார். சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆடும் லெவனில் அவர் இடம்பெறவில்லை.
பர்மிங்ஹாம் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் பும்ரா விளையாடுகிறாரா என்பது இதுவரை சஸ்பென்ஸாகவே உள்ளது. அவர் இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது எந்தப் போட்டி என தெரிவிக்கப்படவில்லை. முதல் போட்டியில் அவர் விளையாடி இருந்தார். அதனால் எஞ்சியுள்ள 4 போட்டிகளில் இன்னும் இரண்டில் தான் அவர் விளையாடுவார்.
அவருக்கு வொர்க் லோடை குறைக்கும் நோக்கில் இந்த விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இந்த தொடரில் பின்னிலையில் உள்ள நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் விளையாடாத பட்சத்தில் இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தப் போட்டியில் விளையாடும் என தெரிகிறது.