மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாபு மனைவி வினோதினி(33). இவர் ஜூன் 4-ஆம் தேதி மாலை இருசக்கர யவாகனத்தில் கும்பகோணத்திலிருந்து அவரது வீட்டுக்குச் சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், திருவாலங்காடு பகுதியில் வினோதினி கழுத்தில் அணிந்திருந்த 10.5 சவரன் தங்க தாலிச் சங்கிலியை பறித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து வினோதினி அளித்த புகாரின்பேரில் குத்தாலம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை உதவி ஆய்வாளர் இளையராஜா ஆத்மநாபன் மற்றும் அணியினர் புலன்விசாரணைக்கு உதவியாக செயல்பட்டனர். விசாரணையில், குத்தாலம் கோனேரிராஜபுரம், முஷ்டக்குடி பிரதான சாலையில் வசிக்கும் வேலுச்சாமி மகன் வெற்றிவேல்(21), தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையை அடுத்த திருப்புறம்பியம் கண்ணாங்குடி தெருவைச் சேர்ந்த சம்மந்தம் மகன் சரண்(20) ஆகிய இருவர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்து, 10.5 சவரன் தங்கச்சங்கிலி மற்றும் குற்றச்சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
மயிலாடுதுறை அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது
- by Authour
