Skip to content

முன்னாள் ஊ.ம.தலைவருக்கு அரிவாள் வெட்டு… திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி மாவட்டம், குணசீலத்தை சேர்ந்த சத்தியநாராயணன் (50). இவர் குணசீலம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர். இவர் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் – திருச்சி சாலையில் கிளியநல்லூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் சத்தியநாராயணனை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார்.

உடனே சுதாரித்துக்கொண்ட அவர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இருப்பினும் அவரை விரட்டி சென்ற அந்த இளைஞர் சத்தியநாராயணனின் காலில் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். இதில் படுகாயமடைந்த சத்தியநாராயணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சமயபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக வாத்தலை அருகே உள்ள கல்லூர் பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் சண்முகவேல் (25) என்பவரை வாத்தலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சண்முகவேல் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு:-

கல்லூர் பகுதியை சேர்ந்த எனது உறவினர் பெண்ணிடம் குணசீலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சத்தியநாராயணன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்தார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அவர் பூர்வீக சொத்தான நிலங்களை எனது உறவினர் பெண்ணுடன் சேர்ந்து அபகரிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து கேள்விப்பட்ட நான் சத்தியநாராயணனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றேன் இவ்வாறு கைது செய்யப்பட்ட சண்முகவேல் போலீசாரிடம் வாக்குமூலம் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சண்முகவேல் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!