தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் பிரச்சார இயக்கத்தை ஜுலை முதல் நாளன்று தொடங்கிவைத்தார். காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து ஆழ்வார்ப்பேட்டையில் பொதுமக்களிடம் சில கேள்விகள் அடங்கிய படிவங்களை முதல்வர் வழங்கி ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் முக்கியத்துவத்தை மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டு மகிழ்ந்தார்.
எந்த நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பாற்றப்பட வேண்டுமென்று நினைக்கிறீர்களா? என்று பொதுமக்களிடம் முதல்வர் ஒரு கேள்வியை முன்வைத்தார். அப்பொழுது “தமிழ்நாடும் தமிழ்மொழியும் வளமாக இருந்தால்தானே நாம் நலமாக வாழ முடியும். எனவே, தமிழ்நாடும், மொழியும், நமது சுயமரியாதையும் காப்பாற்றப்பட வேண்டியது மிக, மிக முக்கியம் என்று அவர்கள் பதிலளித்தார்கள். அதனைக் கேட்டதும் முதல்வர் மிகுந்த மகிழ்ச்சியோடு “அதற்காகத்தான் திமுகவும் இந்த அரசும் பாடுபடுகிறது” என்று தெரிவித்தார்.
அடுத்துள்ள வீட்டுக்குச் சென்றபோது முதல்வரை எதிர்கொண்டு, மகிழ்ச்சியோடு வாங்க, வாங்க என்று அகமும் முகமும் மலர வரவேற்றவர்களை நோக்கி ‘ஓரணியில் தமிழ்நாடு’ படிவத்தை அளித்து, மகளிர் தங்கள் உரிமைத் தொகை பெற்றிடவும், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன்களைக் காத்திடும் நலத்திட்டங்களை நாம் தொடர்ந்து பெற்றிடவும் வேண்டுமா? இல்லையா? என்று ஒரு கேள்வியை முதல்வர் முன்வைத்ததும், அங்கே இருந்தவர்கள் “ஆமாம், ஆமாம் இந்த மகளிர் உரிமைத் தொகை எங்களின் தன்மானத்தைப் பாதுகாக்கிறது” என்று உரத்த குரலில் எழுச்சியுடன் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வேர்களாகத் திகழும் விவசாயிகளையும், நெசவாளர்களையும், மீனவர்களையும் மற்றும் பல்வேறு தரப்பினரையும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்திப் பாதுகாக்க வேண்டியது இந்த அரசின் கடமை என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் உணர்கிறோம் என்றும் அவர்கள் கூறியதைக் கேட்டு முதல்வர் மட்டுமல்லாமல், அங்கு உடனிருந்தவர்களும் பெரிதும் வியந்தார்கள்.
அதே தெருவில் உள்ள அடுத்தடுத்த வீடுகளுக்கும் முதல்வர் சென்றார். முதல்வர் தம் வீடு தேடி வந்துள்ளார் என்பதை அறிந்து ஒவ்வொரு வீடுகளிலும் இருந்தவர்கள் அத்தனைபேருடைய முகத்திலும் மகிழ்ச்சிக்கலை பொங்கி எழுந்தது என்றால் அது மிகையில்லை. மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய அந்த மக்களிடம் முதல்வர் மாணவர்களுக்கான கல்வி நிதி, மாநில வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதிப்பகிர்வு, நியாயமற்ற தொகுதி மறுவரையறை, கொடுமையான நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் முதலியவைகளிலிருந்து நம் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமா?. வேண்டாமா? என்று ஒரு கேள்வியை எழுப்பியதுதான் தாமதம், உடனடியாக அவர்கள் எல்லோரும் சேர்ந்து அப்படி ஒரு கேள்வியே வேண்டாம், நம் இளைஞர்கள்தான் நம் நாட்டின் வருங்காலச் செல்வங்கள், தலைவர்கள், நிபுணர்கள். அவர்களை நம்பித்தான் ஒவ்வொரு குடும்பமும் நம் நாடும் இருக்கிறது. எனவே, அவர்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டியது நம் எல்லோருக்கும் உள்ள முக்கிய கடமையாகும் என்று கூறியதைக் கேட்டதும் முதல்வர், இவர்களிடம் நாம் எதையும் கூறாமலேயே இவர்கள் எல்லாம் நமக்கு வழிகாட்டுவது போல் பதில் கூறி மிகுந்த விழிப்போடு இருப்பதைக் கண்டு நமக்குப் பெருமித உணர்வு தோன்றுகிறது என்று குறிப்பிட்டார்.
அதே போல, டெல்லியின் அதிகாரத்துக்கு அடிபணியாமல் தமிழ்நாட்டின் உரிமையைக் காக்கும் முதல்வர்தான் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா? என்றும், இவையனைத்தும் சாத்தியப்பட நிலையான ஆட்சியை வழங்கிட மு.க.ஸ்டாலின் போன்ற ஒரு தலைவரால் மட்டும் முடியும் என்று நம்புகிறீர்களா? என்றும் அப்படியானால், நம் மாநிலத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களுடன், தாங்களும், தங்கள் குடும்பமும் ஓரணியில் தமிழ்நாடு என கரம் கோர்க்க விரும்புகிறீர்களா? என்றும் கேள்விகளை எழுப்பினார்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் எல்லாம் ஆம், ஆம் என்று ஒரே குரலில் மறுமொழி கூறி, முதல்வர் தொடங்கியுள்ள ஓரணியில் தமிழ்நாடு எனும் இயக்கம் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை, இந்த அணியில் நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம்தான் இருக்கிறோம் என்றனர்.
தமிழ்நாட்டை கல்வி, தொழில், பொருளாதார வளர்ச்சிமிக்க மாநிலமாக இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக இப்போது மட்டுமல்ல, எப்போதும் நிலையாக விளங்கச் செய்வதற்கு தாங்கள்தான் என்றும் முதல்வராகத் திகழ வேண்டும். தங்களைப் போன்ற தொலைநோக்குப் பார்வையும், கூர்ந்த மதியும் கொண்டுள்ள பேரறிவாளர்கள்தான் தமிழ்நாட்டை என்றும் தொடர்ந்து ஆட்சிபுரிந்திட வேண்டும் என்பது எங்கள் அனைவரிடமும் உள்ள அசைக்க முடியாத ஒரே கருத்தாகும்.
ஓரணியில் தமிழ்நாடு என்னும் ஒரே சிந்தனையில் நாங்கள் அனைவரும் உள்ளோம் என்று அந்தப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே குரலில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கூறியது தமிழ்நாடு முழுவதும் இந்த இயக்கம் பெறப்போகும் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்தது. இந்நிகழ்வின்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, பகுதிச் செயலாளர் நந்தனம் மதி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.