புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று கற்பக விநாயகர் மண்டபத்தில் திமுக பாக முகவர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் கே. என். நேரு கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அமைச்சர் நேரு அளித்த பேட்டி:
எடப்பாடி பழனிச்சாமி பிரசாரத்தை ஆரம்பித்தால் என்ன ஏற்கனவே அவர் இதுபோன்றுதான் பிரச்சாரத்தை முன்னதாகவே ஆரம்பித்தார். அதை மீறிதான் திமுக வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக முக ஸ்டாலின் வந்தார். அவர் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார் நாங்கள் இரண்டு மூன்று கட்டங்களாக எங்கள் பணியை தொடங்கி விட்டோம்
பாஜகவோடு கூட்டணி வைத்தது அதிமுக தொண்டர்களுக்கே பிடிக்கவில்லை. அதனால் பாஜகவை நன்மை பயக்கும் கட்சி என்று மாற்றுகிறார். நாங்கள் என்ன நன்மை செய்யாமலா இருக்கின்றோம்
முன்பு பாஜகவோடு கூட்டணி இல்லை என்று கூறினார் ,தற்போது கூட்டணி வைத்து நன்மை பயக்கும் கட்சி என்கிறார். அதனை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு கூடும் கூட்டத்தை விட பல மடங்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. எங்களுக்கு கூடும் கூட்டத்தை விட அங்கு கூடிய கூட்டம் குறைவுதான். நாளை தமிழ்நாடு முதலமைச்சர் திருவாரூர் வருகிறார் திருவாரூருக்கு வந்து பாருங்கள். முதலமைச்சருக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்று. 15ம் தேதி மயிலாடுதுறைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருகிறார். அப்போது பாருங்கள் யாருக்கு கூடிய கூட்டம் அதிகம் என்று?
அன்று இருந்த பாஜக நல்ல கட்சி தான். இன்று இருக்கும் பாஜக நல்ல கட்சி இல்லை . அதற்கு என்ன காரணம் என்று வெளிப்படையாக அனைவருக்கும் தெரியும்,
தேர்தலில் அவர் அவர்கள் பணியை அவரவர்கள் செய்வார்கள் . ஆனால் வெற்றியடையப்போவது நாங்கள்தான்.
ஓரணியில் தமிழ்நாடு சிறப்பாக இருக்கிறது. அனைத்து இடத்திலும் அதிகப்படியான உறுப்பினர்கள் சேருகின்றனர் மக்களே முன்வந்து சேருகின்றனர். மிகவும் பிரியமாக இருக்கின்றனர். சர்வர் சரியாக வேலை செய்யும் இடத்தில் எல்லாம் முப்பதாயிரம் பேர் வரை சேர்ந்துள்ளனர். சர்வர் சில இடங்களில் வேலை செய்யவில்லை அந்த இடத்தில்தான் கொஞ்சம் தாமதம் ஆகிறது. சர்வர் வேலை செய்யும் இடத்தில் சிறப்பாக இருக்கிறது.
மத்திய அரசு ஆளில்லா ரயில்வே கேட்-க்கு தீர்வு காண மாட்டார்கள். பாலம் கூட மாநில அரசுதான் கட்டி வருகிறது. ஒன்றிய அரசு பாலம் இணைப்பு கூட கொடுக்கவில்லை, நிலத்தை கையகப்படுத்தி நாங்கள் கொடுக்காமல் இல்லை, நிலம் கையகப்படுத்தும் பொழுது நிலத்திற்கு சொந்தக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகுதான் நிலத்தை கையகப்படுத்தி கொடுக்கும் சூழல் இருக்கிறது.
இவ்வாறு அமைச்சர் கே என் நேரு கூறினார். பேட்டியின்போது அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உடனிருந்தனர்.