ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வருடம் ஆடிப்பிறந்த இரண்டாம் நாளே ஆடி வெள்ளி வந்ததால் அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை
காட்டப்பட்டது. அரியலூர் நகரில் மேல தெருவில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு 5 லட்சம் ரூபாய் புதிய நோட்டுகளில் அம்மனுக்கு பண அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனுக்கும் அம்மன் வீற்றிருக்கும் பீடம் மற்றும் சுவர் முழுவதும் பண நோட்டுகளை மாலைகள் போன்றும் சுவர்களை மறைத்தும் 500 ரூபாய் 100 ரூபாய் 200 ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இது காண்போரை மிகவும் கவர்ந்தது. ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.