பள்ளப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக மயானம் மற்றும் சாலையை ஆக்கிரமித்து செயல்பட்டு வந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளை உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பரபரப்பு.
கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வேலம்பாடி பகுதியில் இருந்து பழனி செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் ஊர் பயன்பாட்டிற்கான மயானம் மற்றும் பொது பயன்பாட்டு சாலை அமைந்துள்ளது. குறிப்பாக அந்த மயானத்தை ஆக்கிரமித்து கடந்த 20 ஆண்டுகளாக வணிக வளாகம் அமைக்கப்பட்டு, 13 கடைகள் செயல்பட்டு வந்துள்ளன.
இந்த நிலையில் மயானத்தையும், நெடுஞ்சாலையையும் ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் சார்பில் தொடர் புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. இது தொடர்பாக அண்மையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் கீழ்.வேலம்பாடி, அண்ணா நகர் பகுதியில் மயானம் மற்றும் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கடைகளை அரவக்குறிச்சி வட்டாட்சியர் மகேந்திரன் தலைமையிலான வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.