ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்துவார் மாவட்டம் சசோட்டி என்ற பகுதியில் மேகவெடிப்பால் இன்று திடீர் வெள்ளப்பெருக்கு. நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குறைந்தது 12 பேர் இறந்திருக்கலாம் என அஞசப்படுகிறது. மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. ” இறந்தவர்களில் யாத்திரிகர்களும் இருக்கலாம் என கூறப்படுகிறது. யாத்திரிகர்கள் தங்கி இருந்த முகாம்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இது குறித்து மத்திய இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தனது பதவில், மேகவெடிப்பில் அதிக சேதம் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. அல்லது அதற்கு மேல் மழை கொட்டினால் அதை மேகவெடிப்பு என்கிறார்கள்.மழைக் காலங்களில், கனமான தண்ணீர் துளிகளுடன் மேகம் தவழ்ந்து வரும்பொழுது தரையிலிருந்து மேல் எழும்பும் வெப்பமான காற்று மழைத்துளி விழுந்து விடாத வண்ணம் தடுக்கும். கிட்டத்தட்ட மேகத்தின் வெளியே வந்துவிட்ட நீரை மீண்டும் மேகத்திற்கு உள்ளேயே இந்த வெப்பக்காற்று அனுப்பும்.
இவ்வாறு கனமான தண்ணீர் துளிகளை மேகத்திற்கு அனுப்பும் வெப்பக்காற்று அழுத்தமே ஒரேநேரத்தில் மொத்தமாக மழையை கொட்டச் செய்துவிடும். இதனால் துளித் துளியாய் அல்லாமல், அருவி போல மழைநீர் கொட்டும். அதன் வீரியமும் வேகமும் மிக அதிகமாக இருக்கும். இதனுடன் காற்றின் வேகம் போன்றவை சேரும்பொழுது அதன் வீரியம் மேலும் அதிகரிக்கும். இதனால்தான் மேக வெடிப்பால், திடீர் வெள்ளப்பெருக்கு கடுமையான நிலச்சரிவு மற்றும் அதிக அளவிலான இடிமின்னல் போன்றவை ஏற்பட்டு சில மணி நேரங்களில் பெரும் சேதங்கள் ஏற்படுகின்றன.