தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலய அன்னையின் பிறப்பு பெருவிழா கொடி ஏற்றத்துடன் துவக்கம், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பழமைவாய்ந்த பூண்டிமாதா பேராலயம் அமைந்துள்ளது. பசிலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்தில் ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட மரத்துண்டின் ஒருபகுதி இக்கோவிலில் பக்தர்களின் அருளிக்கமாக வைக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்த கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்ற வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் அன்னையின் பிறப்பு பெருவிழா
கொடி ஏற்றத்துடன் இன்று துவங்கியது. முன்னதாக மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி பேண்ட் வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஆலயம் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொடி மரம் முன்பு சேலம் மறை மாவட்ட ஆயர் இராயப்பன், கும்பகோணம் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணிசாமி ஆகியோர் கொடியை புனிதம் செய்து பிரமாண்ட கொடிமரத்தில் ஏற்றி வைத்தார். அப்போது அங்கு கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் மரியே வாழ்க, அன்னையே வாழ்க என பக்தி கோஷமிட்டு மாதாவை வழிபட்டனர். இந்த விழா தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற்று தினமும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன.இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா,கர்நாடகா உள்பட பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.