போரூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபர் (29) கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அயனாவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணமான பின்னர் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கோபமடைந்த இளம்பெண் கடந்த மாதம் கணவரை பிரிந்து அயனாவரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அங்கு பெற்றோர் கண் டித்ததால் வெறுப்படைந்த இளம்பெண் எனக்கு யாரும் வேண்டாம் என்று கூறி அங்கிருந்தும் வெளியேறியுள்ளார்.
இளம்பெண் மதுரை செல்வதற்காக செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்த போது ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட கணவரின் செல்போன் எண்ணிற்கு டிக்கெட் விபரம் சென்று உள்ளது. இதனை கண்ட பின்னர் மனைவி பஸ் ஏற வரும் நேரம் பார்த்து ஐ.டி. ஊழியர் பஸ்நிலையம் வந்து உள்ளார். நேற்று இரவு 11.30 மணியளவில் அந்த இளம்பெண் தனது முன்னாள் காதலனுடன் மதுரை செல்வதற்காக கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். தனது மனைவி முன்னாள் காதலனுடன் பஸ் ஏற வந்து இருப்பதை கண்டு ஐ.டி.ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் தனது மனைவியிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதனை கண்ட இளம் பெண்ணின் முன்னாள் காதலன் ஆவேசம் அடைந்து ஐ.டி. ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். அவருடன் சேர்ந்து இளம் பெண்ணும் கணவரை தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் இளம்பெண் மதுரை சென்று விட்டதாக தெரிகிறது.பலத்த காயம் அடைந்த அந்த வாலிபர் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பினார்.இ துகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.