இனியாவது மத்திய அரசு எந்த அரசியலும் பார்க்காமல் கல்விக்கான நிதியை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கையுந்துபந்து போட்டிகள் இன்று (7-ந்தேதி) முதல் 13. – ந் தேதி வரை திருச்சி அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண் / பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் 32 விளையாட்டுக்கள் 37 வகைகளில் மாவட்ட, மண்டல அளவில் போட்டிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது மாநில அளவிலான போட்டிகள் 13 மாவட்டங்களில் 02.10.2025 முதல் 14.10.2025 வரை நடைப்பெற்று வருகிறது.
இதில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கையுந்துபந்து போட்டிகள் இன்று (7-ந்தேதி) முதல் 10-ந் தேதி வரை மாணவர்களுக்கும், 10-ந்தேதி முதல் 13-ந் தேதி வரை மாணவிகளுக்கும் அண்ணா விளையாட்டரங்கம் திருச்சியில் நடைபெற உள்ளது.ஷ
மாவட்ட அளவிலான குழுப் போட்டிகளில் கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான கையுந்துபந்து போட்டிகளில் பங்கேற்பதற்கு, 38 மாவட்டங்களிலிருந்து 555 வீரர்கள் மற்றும் 570 வீராங்கனைகள், அணிமேலாளர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளை இன்று காலை மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர் மதிவாணன்,திருச்சி மாவட்ட கையுந்து கழக செயலாளர் கோவிந்தராஜன் மற்றும் நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கல்வி உரிமை சட்டத்தில் இணைய விண்ணப்பிக்கும் இணையதளம் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து ஆராய்ந்து தேவைப்பட்டால் விண்ணப்பிக்க காலக்கெடு நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆர்.டி.இக்கு வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கவில்லை. அவர்கள் முறையாக ஒதுக்கியிருந்தால் சராசரியாக 60 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்திருப்பார்கள். மத்திய அரசு நிதியை ஒதுக்காவிட்டாலும் மாநில அரசு அந்த நிதியை ஒதுக்கியது.
இனியாவது மத்திய அரசு எந்த அரசியலும் பார்க்காமல் கல்விக்கான நிதியை கால தாமதமின்றி வழங்க வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார்.