தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (34). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இதேபோல் கீழவஸ்தாசாவடி பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (29). இவர் சிராஜ் கடையில் கடனுக்கு பொருட்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் கடன் தொகையை திருப்பி தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி நெய் வாய்க்கால் பகுதியில் பிரதீப் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சிராஜுதீன் பிரதீபை பார்த்து கடன் தொகையை கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிராஜை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிராஜ் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பிரதீபை கைது செய்தனர்.

