பா.ஜ.க உடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்த கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார் என கேட்டார் கலைஞர். கூட்டணி வைத்திருந்த பொழுதும் கருத்தியலில் உறுதியாக இருந்தார். ஆனால் தற்போது பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவினர் பாஜகவின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள் என்று திருச்சியில் திருமாவளவன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இப்போது அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் கூட்டணியாக உருவாக முடியாத அளவிற்கு சிதறி கிடக்கிறார்கள். ஒருமித்த கருத்து அவர்களுக்குள் ஏற்படவில்லை. கூட்டணியாக உருவாகத நிலையில் திமுக கூட்டணியை வீழ்த்துவோம் என அன்புமணி ராமதாஸ் கூறுவது நகைப்புக்குரியது.
பா.ம.க வின் ஒரு அணி திமுக கூட்டணிக்கு வரும் என கூறுவது வெறும் யூகம் தான்.
தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல் பரிசீலித்து அதை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுகவிற்கு விசிக பரிந்து பேசுவதாக சிலர் விமர்சனம் வைத்ததால் கொள்கை தான் எங்களுக்கு முதன்மையானது கூட்டணி இரண்டாம்பட்சம் தான் என்பதை தான் நான் கூறினேன்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்துத்துவ அமைப்புகள் கிறிஸ்துவ மக்கள் மீதும் கிறிஸ்துவ பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதுதான் பாசிசம். இப்படி நடக்கும் என பிரதமருக்கு தெரியும் இதை திசை திருப்பவே பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் சக்திகள் வளர அதிமுக உதவுகிறது. சிலர் அதற்கு துணை போகிறார்கள். அவர்கள் மதவெறியர்களை காலூன்று வைக்க போகிறார்கள். மற்ற மாநிலங்களில் நடந்த அவலம் தமிழ்நாட்டிலும் நடக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அதனால் தான் அவர்களை தமிழ்நாட்டில் காலூன்ற அனுமதிக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.
நான் பெரியார் – அம்பேர்கரின் பிள்ளை. சனாதான சக்திகளுக்கு துணை போகும் வகையில் சீமானும் விஜயும் செயல்படுகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களின் செயல்பாடுகள் பா.ஜ.க விற்கு ஆதரவாக உள்ளது. இதனை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசியம் பேசுவது போல் சீமானும், பெரியார் குறித்து பேசுவது போல் விஜயும் நாடகமாடிகிறார்கள். கொள்கை எதிரியை விஜய் விமர்சிக்கவில்லை, கண்டிக்கவில்லை.
பெரியார் அரசியல் என்பது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அரசியல், விளிம்புநிலை மக்களுக்கான அரசியல் அதை தகர்ப்பேன் என சீமான் கூறுவது இவரே ஆர் எஸ் எஸ் இன் கடப்பாரையாக மாறியுள்ளார் என்பதை தான் காட்டுகிறது அவர் பேசுவது தமிழ் தேசிய அரசியல் அல்ல சனாதன அரசியல்.
பிராமண கடப்பாரையை கொண்டு திராவிடத்தை தகர்ப்பேன் எனக் கூறுவது திமுகவிற்கு எதிரான அரசியல் அல்ல நாம் எல்லோரும் பேசும் அரசியலுக்கு எதிரானது. பெரியார் – அம்பேத்கர் – இடதுசாரி அரசியலுக்க் எதிரானது.
திமுகவிற்கு எதிரான வாக்குகளை எம்.ஜி.ஆர், ராமதாஸ், விஜயகாந்த், வைகோ உள்ளிட்டோர் வாங்கி உள்ளார்கள் அந்த வகையில் சீமானும் அந்த வாக்கை வாங்கி உள்ளார்.
பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களாக முகமுடி அணிந்து விஜயும் சீமானும் வந்துள்ளார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க இந்தளவிற்கு ஆட்டம் போட காரணமே அதிமுக தான். பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்தது அதிமுக செய்த மிகப்பெரிய தமிழ் இன துரோகம். அவர்கள் இங்கு வலுப்பெற்றால் அதிமுக இல்லாமல் போய்விடும் பெரியார் அரசியலும் இல்லாமல் போய் விடும். பா.ஜ.க உடன் கூட்டணி வைத்திருந்த போது மதவாத அரசியலை பேச கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து தான் கலைஞர் கூட்டணி வைத்தார். பா.ஜ.க உடன் கூட்டணி வைத்திருந்த போதுதான் ராமர் எந்த கல்லூரியில் இன்ஜினியரிங் படித்தார் என கேட்டார் கலைஞர். கூட்டணி வைத்திருந்த பொழுதும் கருத்தியலில் உறுதியாக இருந்தார். ஆனால் தற்போது பா.ஜ.க உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவினர் பாஜகவின் கருத்தியல் அடிமையாகி விட்டார்கள். பா.ஜ.க வின் அரசியலை அதிமுகவினர் பேசுகிறார்கள் இது தமிழ்நாட்டிற்கு உகந்தது அல்ல என்றார்.

