Skip to content

​கமல்ஹாசன் பெயர், புகைப்படங்களை வணிக ரீதியில் பயன்படுத்த அதிரடித் தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கமல்ஹாசனின் பெயர், புகைப்படம், பட்டங்கள் மற்றும் அவரது புகழ்பெற்ற வசனங்களை அவரது அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், கமல்ஹாசனின் புகைப்படம், ‘உலகநாயகன்’ என்ற பட்டம் மற்றும் அவரது சினிமா வசனங்களை அச்சிட்டு டி-ஷர்ட்கள் மற்றும் சட்டைகளை விற்பனை செய்து வந்தது. தனது அனுமதியின்றி இவற்றை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது தனது தனி உரிமையைப் பாதிப்பதாகக் கூறி நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஸ்வரா மற்றும் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர், “நடிகரின் தனி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மட்டுமல்லாது வேறு எந்த நிறுவனமும் அனுமதியின்றி அவரது அடையாளங்களைப் பயன்படுத்தக் கூடாது” என்று வாதிட்டனர்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்கள் மற்றும் ஏ.ஐ. (AI) மூலம் உருவாக்கப்பட்ட படங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்தார். மேலும், இது தொடர்பாக ‘நீயே விடை’ நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளிவைத்தார்.

கார்ட்டூன்களில் (Cartoons) கமல்ஹாசன் படத்தைப் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை என நீதிபதி தெளிவுபடுத்தினார்.இந்தத் தடை உத்தரவு குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடவும் கமல் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!