ஜனநாயகன் படத்திற்கு எதிரான புகார் என்ன என்பதை தணிக்கை வாரியம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் பராசரன் வாதிட்டார்.
விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தணிக்கை குழு கடந்த 5ஆம் தேதி பரிந்து செய்ததாம்.
இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்த கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆஷா, “மறு ஆய்வு குழுவுக்கு படத்தை தணிக்கை வாரியம் அனுப்பிய உத்தரவு சட்டப்பூர்வமற்றது. எனவே அந்த உத்தரவை ரத்து செய்கிறேன், ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும்” என தணிக்கை குழுவுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த தீர்ப்புக்கு எதிராக தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதனால் படம் வெளியீடு கேள்விக்குறியானதால் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது. அந்த மனுவில் உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்து படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் கோரியிருந்தது. இந்த மனு கடந்த 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது “இந்த வழக்கை இங்கே விசாரிக்க விருப்பமில்லை, சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுகுங்கள்” என கூறிய நீதிபதி தயாரிப்பு நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதித்த டிவிஷன் பெஞ்ச் உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் மேல்முறையீடு செய்தது. அந்த மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. சென்சார் போர்டு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சதீஷ் பராசரனும் வாதிட்டு வருகிறார்கள். காலையில் தணிக்கை வாரியம் வாதங்களை முன் வைத்தது. அப்பேது “ஒளிப்பதிவு சட்டம் மற்றும் விதிகளின்படி 72 நிமிடங்களுக்கு மேல் நீளமான படங்களுக்கு இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் தணிக்கை வாரிய தலைவருக்கே உண்டு! இந்த வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க போதிய அவகாசத்தை தனி நீதிபதி வழங்கவில்லை. படத்தில் ரூ 500 கோடி முதலீடு செய்துள்ளோம், ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது என அவசர உத்தரவு கோர முடியாது. சான்றிதழ் வழங்குவது தொடர்பான இறுதி அதிகாரம் முழுமையாக தணிக்கை வாரியத்திற்கே உள்ளது.
மண்டல அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் குழுவின் பரிந்துரைகள் வாரியத்தை கட்டுப்படுத்தாது என தெரிவித்தனர். அப்போது நீதிபதிகள், “இந்த படத்தை யாரெல்லாம் பார்த்தார்கள், ஆய்வு செய்ய அதிகாரம் பெற்றவர்கள் யார் ” என கேள்வி எழுப்பினர். அப்போது தணிக்கை வாரியம், “படத்தை பார்த்து பரிந்துரை செய்ய ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவே முழுமையாக படத்தை ஆய்வு செய்துள்ளது” என்றனர். மேலும் தணிக்கை குழு கூறுகையில், அந்த படத்தில் 14 காட்சிகளை நீக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிவித்தோம். ஆனால் 14 காட்சிகளை நீக்கி பின்னரும் தயாரிப்பு நிறுவனம் உடனடி சான்றிதழ் கோரியது. கடந்த 6ஆம் தேதியே இந்த படம் மறுஆய்வு குழுவுக்கு அனுப்பப்படும் என்பது தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரியும் என்றனர். இதையடுத்து உணவு இடைவேளைக்கு பின்னர் ஜனநாயகன் வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. அப்போது தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “படத்திற்கு எதிரான புகார் என்ன என்பதை எங்களுக்கு தணிக்கை வாரியம் தெரிவிக்கவில்லை. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவதாக தகவல் மட்டுமே தெரிவித்திருந்தது. அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்துதான் தனி நீதிபதி ஆஷா உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவில் எந்த தவறும் இல்லை. ஜனநாயகன் படத்தை ஜன 9ஆம் தேதி வெளியிட முடிவு செய்ததால்தான் தனி நீதிபதியிடம் முறையீடு செய்தோம். இவ்வாறு வாதிட்டனர். ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தொடர்பாக இன்றே என்னமாதிரியான உத்தரவு கிடைக்கும் என சொல்லப்படுகிறது

