சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார்-படபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் இரும்புத் தொழிற்சாலையில் இன்று மதியம் நிலக்கரி உலை (Coal Furnace) திடீரென வெடித்துச் சிதறியது.
தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தபோது, நிலக்கரி உலையில் ஏற்பட்ட அதீத அழுத்தம் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டது. வெடித்த வேகத்தில் உலையில் இருந்த சூடான நிலக்கரித் துகள்கள் மற்றும் இரும்புத் துண்டுகள் அங்கே வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சிதறின. இந்த கோர விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலத்த தீக்காயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு, ராய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணி: மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியுள்ளனரா எனத் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

