திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் தரிசன வரிசையில் நின்ற பெண் பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முருகனின் இரண்டாம் படை வீடான இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
கடந்த 26-ம் தேதி குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அப்போது பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பெண் பக்தர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது. இதில் பெண் பக்தர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறித் தாக்கிக்கொண்டனர்.
உடனடியாக அங்கிருந்த போலீசார் தலையிட்டு மோதலைத் தடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தைப் பார்த்த மற்ற பக்தர்கள் தங்களது செல்போனில் எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இனிவரும் காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் வரிசைப் பாதைகளில் கூடுதல் போலீசாரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

