கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் சமாதானம் பேசச் சென்ற கணவர் மற்றும் உறவினர்கள் மீது மனைவி மற்றும் ஜோதிடர் உள்ளிட்ட கும்பல் நடத்திய கத்தியால் குத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் சித்தாப்பூர் தாலுகா அவரேகுப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் நாயக். இவரது மனைவி சுசித்ரா. இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த கமலாகர் பட் என்ற ஜோதிடருடன் சுசித்ராவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியாகச் சுற்றித் திரிந்ததை மகேஷ் நாயக்கின் மகள் நேரில் பார்த்து தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் மனைவியை கண்டித்த மகேஷ் நாயக், இதுகுறித்து சித்தாப்பூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். போலீசார் இருவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பிய நிலையில், கோபித்து கொண்ட சுசித்ரா தனது தந்தை வீட்டுக்கு சென்றார். பின்னர் சமாதானம் பேசுவதற்காக சுசித்ராவின் தந்தை அழைத்ததன் பேரில், மகேஷ் நாயக் தனது தம்பி வசந்த் நாயக் மற்றும் உறவினர் குமார் ஆகியோருடன் அங்கு சென்றார்.
அப்போது அங்கு சுசித்ரா, அவரது தந்தை, கள்ளக்காதலன் கமலாகர் பட் மற்றும் கூட்டாளிகள் என 7 பேர் இருந்துள்ளனர். பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட மோதலில், சுசித்ரா மற்றும் ஜோதிடர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் மகேஷ் நாயக் உள்ளிட்ட 3 பேரையும் சரமாரியாகத் தாக்கி கத்தியால் குத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் வசந்த் நாயக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மகேஷ் நாயக் மற்றும் குமார் ஆகியோர் கார்வார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சுசித்ரா, ஜோதிடர் கமலாகர் பட் உள்ளிட்ட 7 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர்.

