சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். இருப்பினும் திமுக கூட்டணியிலும் கருத்து வேறுபாடுகள் வரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் பாமக ராமதாஸ் அணியை திமுக கூட்டணியில் இணைத்தால், விசிக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும். எங்கள் கொள்கையில் சமரசம் கிடையாது என்று திருமாவளவன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசிக தலைவர் திருமாவளவன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில், “பாஜக மத வெறுப்பு அரசியலை செய்கிறது. பாமக சாதிய வெறுப்பு அரசியலை செய்கிறது. அந்த 2 கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். அந்தக் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்பதை எப்போதோ முடிவு செய்துவிட்டோம். அது இன்று நேற்று எடுத்த முடிவு இல்லை. எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
விசிக வெளியேறும் ராமதாஸ் திமுக கூட்டணியில் இணைந்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம். கூட்டணி கட்டுமானம் திமுகவின் உரிமை. அந்த முடிவை எடுப்பதற்கான உரிமை, சுதந்திரம், அதிகாரம் எங்களுக்கு இருக்கிறது. ஆனால் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. திமுக அந்த முடிவை எடுத்தால் எங்கள் நிலைப்பாட்டிற்காக கூட்டணியில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தலுக்காக பாதையை மாற்ற முடியாது. கருத்தியலும், நம்பகத்தன்மையும் முக்கியம். எங்கள் முடிவில் சமரசம் கிடையாது. ராமதாஸ் திமுக கூட்டணிக்கு வந்தால் விசிக வெளியேறும். பிளவு அரசியல் சக்திகளுடன் பணியாற்ற முடியாது. சாதி, மதம் என்கிற பெயரில் வெறுப்பு அரசியல் செய்வதை அனுமதிக்க முடியாது. மக்களிடம் நம்பத்தன்மையை இழக்க கூடாது என்று நினைக்கிறோம். விசிக கொள்கை மாறாது சமூக பொறியியல் என்கிற பெயரில் பாமக வெறுப்பு அரசியல் செய்கிறது. தேர்தலுக்காக கொள்கையை மாற்ற முடியாது. எங்களுக்கு தேர்தலைவிட விசிக மீதான மக்களின் நம்பிக்கை முக்கியம். தவெக முழுமையான அரசியல் இயக்கமாக மாறவில்லை” என்றார். அன்புமணி பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார். ராமதாஸ் பாமக திமுக கூட்டணியில் இணையும் என்று தகவல் வெளியான நிலையில், திருமாவளவனின் இந்த கருத்து திமுக கூட்டணியில் பரபரப்பையும், வாக்குவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

