Skip to content

1100 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து அழிப்பு

பாலக்காடு, அட்டப்பாடியில் 1,100 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் சிவராத்திரியையொட்டி பாலக்காடு மாவட்ட கலால் துறை உதவி ஆணையாளர்கள் ரோபர்ட், பி.கே.சதீஷ் ஆகியோர் உத்தரவுப்படி அகழி ரேஞ்சு கலால் துறை அதிகாரிகள் தலைமையில் காவலர்கள் நேற்று சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அட்டப்பாடி வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருப்பதாக கலால் துறை மேல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் அட்டப்பாடி அகழி ரேஞ்ச் அதிகாரிகள் சுமேஷ், உதவி இன்ஸ்பெக்டர்கள் அஜித்குமார், போஜன், லட்சுமணன், பிரதீப் ஆகியோர் தலைமையில் காவலர்கள் அதிரடியாக அட்டப்பாடி, புளியம்பதி மலையடிவார பகுதிகளிலும், அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சாராய வேட்டையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது புளியம்பதி மலையடிவார பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பல் கள்ளச்சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. இதையடுத்து அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் காவலர்கள் கைப்பற்றினர். மேலும் பிளாஸ்டிக் டிரம்களில் 1,100 லிட்டர் சாராய ஊறல் குழி தோண்டி புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை காவலர்கள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை அழித்தனர்.

அட்டப்பாடி அருகே தாவளத்தில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் சிவராத்திரி திருவிழா நடைபெறவுள்ளது. அதேபோல சிவராத்திரி நாளன்று பக்தர்கள் மல்லீஸ்வரன்முடி மலையேறுவார்கள். மலைவாழ் மக்கள் திருவிழாவை கொண்டாட போதை பொருட்களை பயன்படுத்துவதும், கள்ளச்சாராயம் கிடைக்கும் இடங்களுக்கு சென்று குடித்து விழாக்களை கொண்டாடுவதும் வழக்கமாக நடக்கும். எனவே கள்ளச்சாராய, போதை பொருட்கள் பயன்படுத்தலை தடுக்கும் விதமாக தொடர்ச்சியாக சாராய வேட்டை நடைபெறும் என போலீசார்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!