கரூர், சுக்காலியூர் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
டிராக்டர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்த காவல்துறையினர், பின்புறத்தில் சிவப்பு

பிரதிபலிப்பு விளக்கு (Red Reflector) அல்லது பிரதிபலிப்பு ஸ்டிக்கர் இல்லாமல் சென்ற வாகனங்களை கண்டறிந்தனர். அவ்வாறான வாகனங்களில் உடனடியாக சிவப்பு பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும் அறிவுரை வழங்கினர்.
மேலும், நம்பர் பிளேட் இல்லாமல் இயக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இரவு நேரங்களில் மற்றும் குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளில் சிவப்பு பிரதிபலிப்பு விளக்கு அல்லது ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் அதிகம் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
எனவே அனைத்து வாகனங்களிலும் கட்டாயம் பிரதிபலிப்பு வசதிகளை பொருத்திக்கொள்ள வேண்டும் என்றும், விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
அதேபோல், நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது சீட் பெல்ட் அணியவும், இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியவும் பொதுமக்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுரை வழங்கினர்.

