ஒடிசா மாநிலம் மயூர்பன்ச் மாவட்டத்தில் உள்ள மிலு என்ற கிராமத்தை சேர்ந்தவர் மால்டே சோரன். இவரது மனைவி லில்லி சோரன். இவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு விறகு மற்றும் காய்ந்த இலைகளை சேகரிப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது திடீரென சுமார் 6 கரடிகள் அவர்களை சுற்றிவளைத்தன. அதில் ஒரு கரடி மால்டே சோரன் மீது பாய்ந்து அவரை தாக்கியது. இதில் காயமடைந்த மால்டே சோரன் தரையில் சுருண்டு விழுந்தார். மறுபுறம் அவரது மனைவி லில்லி, தனது கணவரை தாக்கிய கரடியை தைரியமாக எதிர்கொண்டு தன்னிடம் இருந்த கோடாரியால் அதை அடித்து விரட்டினார்.
அத்துடன் மற்ற கரடிகளும் காட்டிற்குள் ஓடி மறைந்தன.
பின்னர் லில்லி, காயமடைந்த தனது கணவரை கிராம மக்களின் உதவியோடு மருத்துவமனையில் சேர்த்தார். மால்டே சோரனின் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக அவர் கியோஞ்சர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோடாரியால் கரடியை அடித்து விரட்டி கணவரை காப்பாற்றிய பெண்ணின் துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

