Skip to content

காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம்

சென்னையில் கட்டுமான விதிகளை பின்பற்றாமல் காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசினைக் (Dust Pollution) கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் “தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் 2025” (Clean and Safe Construction Guidelines 2025) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கட்டுமானப் பொருட்கள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை (C&D Waste) ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையாக விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

காற்றில் கலக்கும் நுண்துகள்களைக் குறைக்கும் நோக்கில், விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வாகனத்தின் மேல்புறம் மற்றும் நான்கு பக்கவாட்டுகளும் தார்பாலின் கொண்டு முழுமையாக மூடப்படாமல் இருத்தல். கட்டுமானப் பொருட்கள் அல்லது தூசிகள் சாலையில் சிதறும் வகையில் ஏற்றிச் செல்லுதல். நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் (Overloading) கூடுதல் சுமை ஏற்றுதல் உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபடும் வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். மேலும், அபராதத் தொகையாக ரூ.25,000/- அந்த இடத்திலேயே (Spot Fine) விதிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், அபராதத் தொகையை முழுமையாகச் செலுத்திய பின்னரே விடுவிக்கப்படும்.

சென்னை மாநகரைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள், வாகன உரிமையாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!