காவி உடையில் திருவள்ளுவர் இருந்தவாறு தாய்மொழி தின வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி பதிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. உலகிலுள்ள சுமார் 7,000 மொழிகளின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில், இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. உலக தாய்மொழி தினத்தையொட்டி, அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில்,
“நம் உயிருக்கு நேராம்,
சமூகத்தின் விளைவுக்கு நீராம்,
உரிமைச் செம்பயிருக்கு வேராம்,
உயர்வுக்கு வானாம்,
பிறவிக்குத் தாயாம்,
நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன்…
தமிழுக்கும் தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும் என்று உறுதியளிக்கிறேன்..”,இவ்வாறு தெரிவித்தார். மேலும் காவி உடையில் திருவள்ளுவர் இருந்தவாறு படத்தையும் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருந்தார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் படத்தை நீக்கினார்.

