Skip to content

இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: திருச்சூர் வாலிபர் கைது

கேரள மாநிலம் திருச்சூர் தான்யம் பகுதியை சேர்ந்தவர் யது கிரிஷ் (38). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் என பல இளம்பெண்களுடன் பழகி வந்துள்ளார். அவர்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனது வலையில் சிக்கவைத்துள்ளார். அவர் கூறிய ஆசை வார்த்தையில் ஏமாந்து பழகும் பெண்களை தனியாக பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

அதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அவர்களிடம் காண்பித்து மிரட்டி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டபடி இருந்திருக்கிறார். கிரிசின் வலையில் சிக்கி ஏமாந்த இளம்பெண்களில் 3 பேர், திருச்சூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் யது கிரிஷ் 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் பாலியல் பலாத்காரம் செய்வதை வீடியோ எடுத்து, சம்பந்தப்பட்ட இளம்பெண்களை மிரட்டி பணமும் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளனர்.
யது கிரிஷ் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்த 3 இளம்பெண்களிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். ஆனால் அவரிடம் சிக்கி ஏமாந்த மற்ற பெண்கள், அவமானத்துக்கு பயந்து புகார் அளிக்கவில்லை. ஆனால் அவர்களையும் கண்டுபிடித்து வாக்குமூலம் பெறும் முயற்சியில் திருச்சூர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

யது கிரிஷிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில், அவர் பாலியல் பலாத்காரம் செய்த இளம்பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் இருந்தன. அந்த செல்போனை போலீசார் தொழில்நுட்ப ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இன்ஸ்டாகிராமில் பழகிய இளம்பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!