Skip to content

மகளிர் உரிமைதொகையை நிறுத்தி விடலாம் என்று நினைத்தார்கள்… உதயநிதி ஸ்பீச்

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா உடுமலைப்பேட்டை, திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, கழக மூத்த முன்னோடிகள் 1,200 பேருக்கு, பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சக்கரபாணி, சாமிநாதன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “இங்கு நான் துணை முதல்வராகவோ இளைஞரணி செயலாளராகவோ உங்களை நான் பார்க்க வரவில்லை. மூத்த முன்னோடிகளின் பேரனாக உங்களை பார்க்க வந்துள்ளேன். பெரியார், அண்ணா, கலைஞர் உடைய மறு உருவமாக மூத்த முன்னோடிகளான உங்களை பார்க்கிறேன். கழக முன்னோடிகள் பார்க்கும் பொழுது புது உற்சாகம் பிறக்கின்றது. மேற்கு மண்டல நிர்வாகிகள் 80 ஆயிரம் நபர்களை சந்திக்கும் நிகழ்ச்சி கோவையில் இன்று மாலை நடைபெற உள்ளது. திமுக தொடங்கிய 76 ஆண்டுகள் ஆன பொழுதும் இன்றும் வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது. அதற்கு முழுமுதற்காரணம் கழகத்தினுடைய மூத்த முன்னோடிகளான நீங்கள் தான். அதிமுகவோ பாஜகவோ இதுபோன்ற விஷயங்களை ஒரு நாளும் கொண்டாட முடியாது. 

மகளிர் உரிமை தொகையை நிறுத்தி விடலாம் என ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டினார்கள், தேர்தலை காரணம் காட்டி நீதிமன்றத்தை நாடி மகளிர் உரிமை தொகையை நிறுத்தி விடலாம் எனவும் நினைத்தார்கள். ஆனால் தலைவர் மகளிருக்கு அந்தத் தொகை சென்று சேர வேண்டும் என முடிவெடுத்து வழங்கி உள்ளார். காலை 7 மணிக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. மக்கள் 9 மணிக்கு வங்கியில் பணம் எடுக்க தொடங்கி விட்டார்கள். ஏனென்றால் ஒன்றிய அரசு அந்த பணத்தையும் விட்டு வைக்காத என மக்களுக்கு தெரிந்து இருந்தது. 2026 தேர்தலிலும் கழக ஆட்சி தான் தொடரும். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை நிச்சயமாக நாம் வெல்வோம். தமிழ்நாட்டின் வெற்றிக்காக யார் களத்தில் இருக்கிறார்களோ இல்லையோ, தி.மு.க-வின் தொண்டன் கடைசி உடன்பிறப்பு நிச்சயமாகக் களத்தில் நின்று அந்தப் போரில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்” என்றார்.

error: Content is protected !!