கோவை துடியலூர் அருகே பன்னீர்மடை பகுதியில் பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னீர்மடை பகுதியை சேர்ந்தவர் விவசாயி துரைராஜ்(50). வழக்கம்போல இவர் இன்று மாலை சுமார் 3:30 மணி அளவில் அவர் வளர்க்கும் மாட்டிற்கு தண்ணீர் வைக்க சென்ற பொழுது அங்கு செடிக்கு அருகில் இருந்த விஷப்பாம்பு எதிர்பாராத விதமாக துரைராஜை காலில் கடித்துள்ளது.
அதில் அவர் சுயநினைவை இழந்த நிலையில் உடனடியாக அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் துரைராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் துரைராஜன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இது குறித்து தடகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வெயில் காலம் துவங்கி உள்ள நிலையில் வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு இதுபோன்ற விஷ ஜந்துக்கள் குளிர்ச்சியான பகுதியிலும், மரம் செடி கொடிகளுக்கு அடியிலும் அதிகம் வரும் என்பதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியிலும் அப்பகுதி மக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

