கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா குர்லாஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனிராஜூ (35), தனது மனைவி சுனிதாவின் கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
முனிராஜூ – சுனிதா தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே, சமூக வலைதளம் மூலம் சுனிதாவுக்கு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுனிதா தனது கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டார்.
பெற்றோர்கள் தலையிட்டு சுனிதாவை சமாதானப்படுத்தி, மீண்டும் முனிராஜூவுடன் சேர்த்து வைத்தனர். முனிராஜூவும் மனைவியை மன்னித்து ஏற்றுக்கொண்டார். ஆனால், வீட்டிற்கு வந்த பின்னரும் சுனிதா தனது கள்ளக்காதலனுடன் செல்வதாகக் கூறி கணவருடன் மீண்டும் சண்டையிட்டுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனைக்குள்ளான முனிராஜூ, நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தகவல் அறிந்து வந்த சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசார், முனிராஜூவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியின் பிடிவாதமே இந்தத் தற்கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகச் சுனிதாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

