Skip to content

நெல்லை நாங்குநேரி இரட்டை கொலை!..5 தனிப்படைகள் அமைப்பு

நெல்லை மாவட்டம், நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு 9 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இருசக்கர வாகனங்களில் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிய அந்த கும்பல், அவர்களது வாகனத்தையும் பறித்துச் சென்றது.

இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அந்தக் கும்பல் நாங்குநேரி பெரும்பத்துக் கிராமத்திற்குச் சென்றது. அங்கு ஒரு டீக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய அந்தக் கும்பல், பீதியடைந்து ஓடிய மக்களை விரட்டிச் சென்று சரமாரியாக தாக்கியது.

இதில் மாற்றுத்திறனாளியான ஜான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த வடமாநிலத் தொழிலாளி ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த தாக்குதல்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தின.

பெரும்பத்தைச் சேர்ந்த நெல்சன், பிரபாகரன், ராமசாமி, அருகிலுள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் மற்றும் வீராங்குளத்தைச் சேர்ந்த கணேசன் ஆகியோர் இத்தாக்குதலில் காயமடைந்தனர். மொத்தம் 6 பேர் காயமடைந்து உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

காயமடைந்த நெல்சன் மற்றும் கணேசன் இருவருக்கும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் நாங்குநேரி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திருநெல்வேலி சரக டிஐஜி சரவணன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.

குற்றவாளிகள் போதையில் இருந்ததாக கூறப்பட்டாலும், இந்த இரட்டைக் கொலை எவ்வாறு நடந்தது, ஏதேனும் முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அப்பகுதியில் நிலவும் சமூகப் பதற்றங்கள் குறித்தும் காவல்துறை ஆராய்ந்து வருகிறது.

இக்கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் நாங்குநேரி பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க, அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!