கரூர் அருகே காணாமல் போன பத்தாம் வகுப்பு அரசு பள்ளி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு – இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை.
கரூர் மாவட்டம், நெரூர் செல்லும் சாலையில் உள்ள காளிபாளையம்
பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் – சாந்தி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் இனியா, அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த 19ஆம் தேதி இரவு நேரம் செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த மாணவி, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அடுத்த நாள் காலை எழுந்த பெற்றோர், மகளை காணவில்லை என்று அருகில் எங்கு தேடியும் கிடைக்காததால் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், இன்று சிறுமியின் வீட்டு அருகே உள்ள விவசாய கிணற்றில் சிறுமியின் உடல் மிதந்த நிலையில் காணப்பட்டது. போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இறப்புக்கு பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். குறிப்பாக சம்பவ இடத்தில் கரூர் நகர காவல் ஆய்வாளர் மற்றும் தடவியல் துறை அதிகாரிகள் மோப்பநாய் உதவியுடன் தடயங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து விசாரணை.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

