கரூரில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கரூரில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) இளைஞரணி சார்பில், கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தொடர்பான வியூகங்கள் அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இளைஞரணியின் பங்கு, வாக்காளர் தொடர்பு பணிகள், களப்பணிகள் மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் இருந்து சாலை மார்க்கமாக கரூர் வந்தடைந்தார். கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.
உரையில், சட்டமன்றத் தேர்தலில் இளைஞரணியின் முக்கியத்துவம், பொதுமக்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தும் பணிகள், வீடு வீடாகச் சென்று வாக்காளர் அணுகுமுறை உள்ளிட்ட களப்பணிகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.
மேலும், கட்சியின் கொள்கைகள் மற்றும் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க இளைஞரணி ஒருங்கிணைந்து, திட்டமிட்டு செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் மு.பே. சாமிநாதன், முத்துசாமி, சக்கரபாணி, ஈரோடு மக்களவை உறுப்பினர் பிரகாஷ், செல்வராஜ் உள்ளிட்ட கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த திமுக முன்னணி நிர்வாகிகள், இளைஞரணி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
