நேபாள நாட்டிற்கு இந்திய சுற்றுலா பயணிகள், காரில் செல்லும் போது, குட்கா போட்டு சாலையில் துப்பியுள்ளனர். இதனை கவனித்த நேபாளவாசி ஒருவர், உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, ”இது இந்தியா இல்லை சகோதரரே… நேபாளம். சீக்கிரம் தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்யுங்கள்” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
இதனால் மிகுந்த தர்மசங்கடத்துக்கு ஆளான இந்திய சுற்றுலா பயணிகள், பலமுறை மன்னிப்பு கேட்டனர். இருப்பினும், அந்த நபர் சாலையில் படிந்திருந்த குட்கா கறைகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வைத்தார். இந்த சம்பவத்தை படம்பிடித்த அந்த நபர், ”நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்கள்… இவ்வளவு பெரிய நாட்டிலிருந்து வந்துவிட்டு இங்கே வந்து அழுக்கு செய்கிறீர்களே” என்று ஆதங்கத்துடன் கூறினார். வெறும் ‘சாரி’ மட்டும் சொல்லிவிட்டு செல்லாமல், அந்த இடத்தை முறையாக சுத்தம் செய்யுமாறு அவர் மீண்டும் வற்புறுத்தி உள்ளார்.
பல லட்சம் பேர் பார்த்த இந்த வீடியோ, பொது ஒழுக்கம் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் உள்ளிட்ட பல சமூக வலைதள பயனர்கள், அந்த நேபாள நபர் செய்ததை வரவேற்றுள்ளனர். அதேநேரம், சிலர், அந்த நபர் ஓவராக போகிறார். இதெல்லாம் ரொம்ப அதிகம் என்று விமர்சிக்கிறார்கள்.
