மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்துவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கட்டுப்படுத்துவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
ராகுல் காந்தி கூறியதாவது: “இந்தியா ரஷ்யா அல்லது ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டுமானால், அமெரிக்காவின் அனுமதி தேவைப்படுகிறது. ட்ரம்ப் அனுமதி கொடுத்தால்தான் எண்ணெய் வாங்க முடியும். இது இந்தியாவின் இறையாண்மைக்கு பெரும் அவமானம்” என்றார்.இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா அமெரிக்காவிடம் ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது “Make in India” திட்டத்துக்கு எதிரானது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகள் மற்றும் சிறு தொழில்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ராகுல் எச்சரித்தார்.அஸ்ஸாம் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல்கார்பி ஆங்க்லாங் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அஸ்ஸாம் பழங்குடி பகுதிகளுக்கு அதிக சுயாட்சி வழங்கும் அரசியல் சாசனம் பிரிவு 244A-ஐ காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முழுமையாக நடைமுறைப்படுத்துவோம் என்று உறுதியளித்தார்.“கார்பி ஆங்க்லாங், டிமா ஹசாவோ உள்ளிட்ட பழங்குடி பகுதிகளை குவஹாத்தி அல்லது டெல்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோலில் ஆள முடியாது. அந்தப் பகுதி மக்களே தங்கள் நிலம், வளங்கள், அரசியல் மற்றும் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். இதற்கு Article 244A அவசியம். நாங்கள் அதை நிறைவேற்றுவோம்” என்று அவர் வலியுறுத்தினார்.
ராகுல் காந்தி மேலும் கூறியதாவது: “காங்கிரஸ் அதிகாரப் பரவலாக்கத்தை நம்புகிறது. உண்மையான அதிகாரம் மக்கள் கையில் இருக்க வேண்டும். நாட்டை ஆள்வதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் பங்கு இருக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் தத்துவம். ஆனால் பாஜகவோ அஸ்ஸாமை டெல்லியில் இருந்து ஆள விரும்புகிறது.”அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை “இந்தியாவின் மிகவும் ஊழல் மிக்க முதலமைச்சர்” என்று விமர்சித்த ராகுல், அவரும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் சேர்ந்து “நில ATM” (land ATM) இயக்குவதாகக் குற்றம் சாட்டினார்.
பழங்குடி நிலங்களை பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்குவதற்காக பெரும் பணம் பெறப்படுவதாகவும், அதை தேர்தல் செலவுக்கு பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் ஹிமந்தா சர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவருக்கு மன்னிப்பு கிடையாது என்றும் ராகுல் எச்சரித்தார்.இந்தப் பேச்சு அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகள் வெளியான பிறகு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
