அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் 149.அரியலூர் மற்றும் 150.ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பபட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பொ.இரத்தினசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி உடனிருந்தார்.
அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட, 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் வகையில் கீழப்பழூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் அதனுள் வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரம் (VVPAT) வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையிலிருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்வதற்கான பாதைகள், வாக்கு எண்ணும் அறைகள், அஞ்சல் வாக்குச்சீட்டுகள் வைப்பதற்கான இடங்கள், ஒவ்வொரு தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்திற்கும் வேட்பாளர்களின் முகவர்கள் சென்றுவரும் பிரத்யேக வழிகள் குறித்தும், காவல்துறையின் சார்பில் அமைக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர் முகவர்களுக்கான இட வசதிகள், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் அறைகள். தேர்தல் மேற்பார்வையாளர்கள் அறைகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்தும், ஊடக மையம் ஆகியவை அமைய உள்ள இடங்களையும், பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வசதிகள், மின்சாரம் வசதிகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, வாக்கு எண்ணும் மையத்தின் வரைபடங்களையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து 149-அரியலூர் சட்டமன்ற தொகுதி, மலத்தாங்குளம் புனித சூசையப்பர் அரசு உதவிப்பெறும் தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளையும், பின்னர், திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த 5 வாக்குச்சாவடி மையங்களையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி பார்வையிட்டு வாக்குச்சாவடி மையங்களின் பாதுகாப்பு வசதிகள் குறித்தும், சாய்வுதளம், மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிவறைகள் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரேமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மனோகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடேசன், இதர அரசு அலுவலர்கள், வருவாய்த்துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மேலும், தேர்தல் தொடர்பான புகார்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24×7 முறையில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை பின்வரும் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனவும் மற்றும் cVIGIL App வாயிலாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள்:
- கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 599 4401
- கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 04329-228845, 04329-228847
