தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இந்த நிலையில் தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி விஜய் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கையில் வேலுடன் சென்ற விஜய், அதிகாலையில் நடந்த விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து மறுநாள் மராட்டிய மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.இந்நிலையில் தனது ஆன்மிக பயணத்தின் தொடர்ச்சியாக நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம், நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்கா ஆகிய வழிபாட்டு தலங்களுக்கும் இன்று (சனிக்கிழமை) அவர் சென்று வழிபாடு நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வரும் அவர் பின்னர் அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக வேளாங்கண்ணிக்கு வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. த.வெ.க. தலைவர் விஜய் வருகையையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் த.வெ.க. தொண்டர்கள் குவிந்தனர். இன்று விஜய் வருவார் என அதிகாலை 3 மணி முதல் காத்திருந்தநிலையில், இதுவரை அவர் வராததால் ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விஜய் அங்கு வராத நிலையில் டி.வி.கே., டி.வி.கே. என தொண்டர்கள் முழக்கமிட்டதால் திருப்பலி 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது.இதற்கிடையே, நாளை (ஞாயிற்றுக்கிழமை) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு தொடர்பாக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
