பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல், பிடிபட்ட பாம்பை வைத்து வீரப் பராக்கிரமங்களைக் காட்ட முயன்ற பாம்பு பிடி நபர் ஒருவர், பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டிடத்திற்குள் புகுந்த பாம்பைப் பிடிப்பதற்காக வரவழைக்கப்பட்ட அந்த நபர், பாம்பைப் பாதுகாப்பாகப் பையில் அடைப்பதற்குப் பதிலாக, மக்கள் முன்னிலையில் அதன் தலையில் தட்டியும், சீண்டியும் விளையாட ஆரம்பித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பாம்பு, எதிர்பாராத விதமாக அவரது காலிலும் விரலிலும் பலமாகத் கடித்தது. பாம்பு கடித்த பிறகும் அவர் சற்றும் பதறாமல், “ஓ கடிக்கிறியா… கடி கடி” என்று கேலியாகப் பேசியவாறு தொடர்ந்து அந்தப் பாம்புடன் விளையாடியதுடன், அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். ஆனால், சிறிது நேரத்திலேயே உடலில் விஷம் ஏறியதால் அவர் மக்கள் மத்தியிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்களைக் கையாளும்போது எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.
