வாஷிங்டன்: உலகையே அச்சுறுத்தி வந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் உலகளாவிய இரண்டாவது முக்கிய தளபதியும், அதன் துணைத் தலைவருமான அபு-பிலால் அல்-மினுகி, அமெரிக்க மற்றும் நைஜீரிய கூட்டுப் படைகளால் வெற்றிகரமாக சுட்டுக் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் உலகளாவிய செயல்பாட்டு நெட்வொர்க்கிற்கு விழுந்த மிகப்பெரிய பலத்த அடியாகும் என்று அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மிக முக்கிய கூட்டு ஆபரேஷன் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், ‘நைஜீரியாவில் அமெரிக்க மற்றும் நைஜீரிய படைகளால் மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு இந்த சிக்கலான ஆபரேஷன் மிகச்சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது; உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த தீவிரவாதியான அபு-பிலால் அல்-மினுகி, ஆப்பிரிக்காவில் மறைந்திருக்க முடியும் என்று நினைத்தார்; ஆனால் அவர் வேட்டையாடப்பட்டுள்ளார்.
இந்த கூட்டு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய நைஜீரிய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பிராந்திய கிளைகள் மற்றும் போகோ ஹராம் உள்ளிட்ட தீவிரவாத குழுக்களுக்கு எதிராக நைஜீரியா தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
