கரூர்:26.05.2026
கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டு ஓட்டுனார்களுக்கு அறிவுரை வழங்கினர்.
கரூர் மாவட்டத்தில் 91 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றுக்குச் சொந்தமான 700-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாகனங்களின் பாதுகாப்பு வசதிகள் மற்றும் செயல்திறனை மதிப்பீடு செய்யும் வகையில், கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆய்வு முகாம் நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் சி. முத்துக்குமரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பள்ளி பேருந்துகளை நேரில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது பேருந்துகளில் அவசரகால வெளியேறும் வழி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி, கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் முறையாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்தனர்.
மேலும், அவசரநிலைகளில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பேருந்துகளில் இருந்து வெளியேறும் நடைமுறைகள் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஓட்டுநர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சியையும் நடத்திக் காட்டினர்.
