தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஜோதிநகரை சேர்ந்தவர் ஆறுமுகராஜ். இவர் சொந்தமாக நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் அய்யப்பன் (28) என்பவர் அவர் தனது நகைகள் சுமார் ரூ.50 லட்சத்திற்கு நெல்லை டவுனில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் தங்க நகைகள் அடமானத்தில் உள்ளன. அந்த நகையை உங்கள் நிறுவனத்தில் வைத்து கூடுதலாக பணம் பெற இருக்கிறேன். எனவே அந்த நகைகளை திருப்ப உதவிட வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய ஆறுமுகராஜ் ரூ.50 லட்சத்தை கொடுத்துள்ளார்.
அந்த பணத்தை பெற்றுக்கொண்ட அய்யப்பன் ஸ்ரீபுரத்தில் உள்ள நிதி நிறுவனத்திற்கு சென்று நகைளை திரும்ப பெற்று அந்த நகைளை ஆறுமுகராஜ் நடத்தி வரும் நிதிநிறுவனத்தில் அடமானம் வைக்காமல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ஆறுமுகராஜ் உடனடியாக நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் அய்யப்பன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த உடையார் (29) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த நகைகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
