கர்நாடக மூத்த அமைச்சரான ஆர்.ராமலிங்க ரெட்டி, தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகா திருப்தி அளிக்காததால் தனது அமைச்சர் பதவியை இன்று அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். டி.கே.சிவக்குமார் தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்து, இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட இரண்டே நாட்களில் ஆளும் காங்கிரஸ் அரசுக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒதுக்கீட்டில் அவருக்கு ‘பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் துறை’ (Water Resources) வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகக் கட்சியில் இருக்கும் தனக்கு, மாநிலத் தலைநகரைக் கவனிக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ‘பெங்களூரு நகர வளர்ச்சித் துறை’ (Bengaluru Development) ஒதுக்கப்படும் என முதல்வர் சிவக்குமார் முன்னரே உறுதியளித்திருந்ததாக ராமலிங்க ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஒதுக்கீட்டில் அந்தப் பொறுப்பு மற்றொரு மூத்த தலைவரான கிருஷ்ண பைரே கவுடாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த ராமலிங்க ரெட்டி, “தொடர்ந்து எனக்கு இழைக்கப்படும் இந்த அவமானங்களை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது; எனது மனசாட்சிக்கு விரோதமாக என்னால் பணியாற்ற இயலாது” என்று கூறித் தனது ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார்.
கடந்த காலங்களில் உள்துறை, போக்குவரத்து உள்ளிட்ட முக்கியத் துறைகளைத் திறம்பட கையாண்ட தனக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றத்தில் அவர் இந்த முடிவை எடுத்திருந்தாலும், தான் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே நீடிப்பேன் என்றும், சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
