டெல்லியில் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற தம்பதியினர், கடைசி நிமிடத்தில் தங்களின் முடிவை மாற்றி மீண்டும் ஒன்று சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த சிக்கா சிங் என்ற பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் வரதட்சணைப் புகார் காரணமாகப் பிரிந்து வாழத் தொடங்கினர். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், குடும்ப சூழ்நிலை மற்றும் கடுமையான நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருந்த சிக்காவின் தந்தைக்குச் சமீபத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையறிந்த அவரது கணவர், தங்களுக்குள் இருந்த கசப்பான சம்பவங்களையும் கோபத்தையும் மறந்து உடனடியாக மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்றார். மேலும், தன் மாமனாரைத் துரிதமாக ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றி, சிகிச்சைக்குத் தேவையான பணத்தையும் தன் சொந்தப் பொறுப்பில் செலவழித்துக் காப்பாற்றினார். கணவரின் இந்த பெருந்தன்மையையும், தன் குடும்பத்தின் மீதான பாசத்தையும் அறிந்த மனைவி சிக்கா சிங், கணவரைப் பற்றித் தவறாக எண்ணிவிட்டோமே என்று நினைத்து உடைந்திருக்கிறார். இதையடுத்து, நீதிமன்றத்தில் இவர்களது விவாகரத்து வழக்கின் இறுதி விசாரணை வந்தபோது, அங்கு தன் கணவரைக் கண்டதும் கண்ணீர் விட்டு அழுத சிக்கா, விவாகரத்து மனுக்களை அங்கேயே கிழித்தெறிந்துவிட்டு ஓடிப்போய் தன் கணவரைக் கட்டியணைத்துக் கொண்டார். ஈகோக்களைக் கடந்து தங்களின் திருமண வாழ்க்கைக்குப் புதிய வாய்ப்பளித்து நீதிமன்ற வளாகத்திலேயே இத்தம்பதி மீண்டும் ஒன்று சேர்ந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களின் பாராட்டுகளுடன் வைரலாகி வருகிறது.
