ஈரானைச் சேர்ந்த 29 வயது பாடகி பிரஷ்டொ அகமதி, கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இசைநிகழ்ச்சி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் பாடியுள்ளார். இந்த வீடியோ யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, ஈரான் நாட்டு அதிகாரிகள் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பிரஷ்டொ அகமதி குற்றவாளி எனத் தீர்ப்பளித்த ஈரான் நீதிமன்றம், அவருக்குக் கொடூரத் தண்டனையாக 74 கசையடிகள் வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வெளிநாடு செல்லவும், இசைநிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதித்துள்ளது. ஹிஜாப் சட்டத்தை மீறியதற்காகப் பாடகிக்குக் கசையடி தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
