தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா நியமிக்கப்பட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நியமனத்தின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் நிரூபித்துள்ளதாகச் சாடியுள்ளார்.
விஜய்யின் இறுதிப் படத்தைத் தயாரித்ததோடு, மலேசியாவில் அவருக்குப் பிரம்மாண்டமாகப் பிரியா விடை விழா நடத்தியதற்காகவே வெங்கட் நாராயணாவுக்கு அமைச்சருக்கு இணையான இந்த உயர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக இருக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இப்பதவியைக் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், மக்களுக்கு நல்லாட்சி வழங்கவே மக்கள் முதல்வரைத் தேர்ந்தெடுத்தனர் என்றும், வேண்டப்பட்டவர்களுக்குப் பதவி வழங்க அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த நியமன உத்தரவை முதல்-அமைச்சர் விஜய் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனத் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
