அருணாசல பிரதேச மாநிலம் மேற்கு காமேங் மாவட்டத்தில் உள்ள திரங் பகுதியில், 3 ராணுவ வீரர்களுடன் சென்ற இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான வாகனம் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. மலைப்பாங்கான அந்தப் பாதையில் பயணித்தபோது, வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், முற்றிலும் சேதமடைந்த வாகனத்திற்குள் சிக்கிப் படுகாயமடைந்திருந்த 3 வீரர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுரேந்தர் சிங் என்ற ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற இரு வீரர்களுக்கும் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ராணுவத் தரப்பிலும் காவல்துறையினராலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
