சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த அண்ணாமலையின் மகன் சுகனேஸ்வரன் (25), தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சகாதேவனின் மகன் முத்தமிழ் (25), கோவையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்திருந்த இருவரும், இன்று அதிகாலை பைக்கில் ஆண்டகலூர்கேட் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பெங்களூருவில் இருந்து கேரளா நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ், சேலம்–நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகே அவர்கள் சென்ற பைக் மீது மோதியது.இந்த விபத்தில், இருசக்கர வாகனம் சுமார் 500 மீட்டர் தூரம் வரை பேருந்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சுகனேஸ்வரன் மற்றும் முத்தமிழ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராசிபுரம் காவல்துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பரின் தந்தையை அழைத்து வருவதற்காக ஆண்டகலூர்கேட் பகுதிக்குச் சென்றபோதுதான் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
